முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சின்னர்! கோப்பை வெல்வாரா?
இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் முதல்முறையாக வென்ற யானிக் சின்னர் குறித்து...
டென்னிஸ் போட்டித் தரவரிசையில் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கும் வீரரான யானிக் சின்னர் இண்டியன் வெல்ஸ் அரையிறுதியில் வென்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் யானிக் சின்னர், முதல்முறையாக இண்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் 1000 தொடரில், இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த சின்னர் மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் அரையிறுதியில் மோதினார்கள். இந்தப் போட்டியில் சின்னர் மிகவும் அதிரடியாக விளையாடினார்.
இந்தப் போட்டி 1 மணி நேரம் 24 நிமிஷத்தில் முடிவடைந்தது. சின்னர் 6-2, 6-4 என்ற செட்களில் அபார வெற்றியைப் பெற்றார். இதன் மூலம் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
நான்குமுறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற சின்னர், போட்டித் தரவரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கும் ஸ்வரெவை தொடர்ச்சியாக 6 முறை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.
இறுதிப் போட்டியில் டேனியல் மெத்வதேவ் உடன் சின்னர் மோதுகிறார். அரையிறுதியில் மெத்வதேவ் அல்கராஸை வீழ்த்தினார்.
கடந்த 2023, 24ஆம் ஆண்டுகளில் அரையிறுதியில் அல்கராஸிடம் தோல்வியுற்ற சின்னர், கடைசியாக நடந்த ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 தொடர்களில் அனைத்து (6) கடின தரை போட்டிகளிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இறுதிப் போட்டியில் வென்று சாதனை நிகழ்த்த காத்திருக்கும் சின்னருக்கு மெத்வதேவ் அதிர்ச்சி அளிப்பாரா என டென்னிஸ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.