பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளி மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் குழாய் உடைப்பு
பழனி நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் மேல்நிலைத் தொட்டிகளுக்கு செல்லும் குழாய்கள் அடுத்தடுத்து உடைந்து வருவதால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம்
பழனி நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் மேல்நிலைத் தொட்டிகளுக்கு செல்லும் குழாய்கள் அடுத்தடுத்து உடைந்து வருவதால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய கோயில் நகரமான பழனியில் பொதுமக்களுக்கும், வருகை தரும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யும் பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. தற்போது பழனி திண்டுக்கல் சாலையில் சாலையை அகலம் செய்யும் பொருட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் பழனி நகராட்சி வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான மேல்நிலைத் தொட்டிகளான சிவகிரிப்பட்டி மேல்நிலைத் தொட்டி, நகராட்சி மேல்நிலைத் தொட்டி உள்ளிட்டவை உள்ளது.
கடந்த பங்குனி உத்திரம் திருவிழாவிற்கு முன்னதாக சாலையை அகலம் செய்யும் பணியின் போது வைபரேட்டர் இயந்திரத்தை வைத்து சாலையை சமன்படுத்தும் போது சிவகிரிப்பட்டி மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் பிரதான பைப்லைன் உடைந்து போனது. இதனால் நகராட்சிக்கு உட்பட்ட 15க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் போனது. இதைத் தொடர்ந்து பழனிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பாலாறு பொருந்தலாறு அணையில் போதிய தண்ணீர் இருந்தும் வினியோகம் செய்ய முடியாத நிலையில் லாரிகள் மூலம் வார்டுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் செய்ற்கையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை அரசு மருத்துவமனைக்கு எதிரே சிறிது தூரம் தள்ளி உள்ள மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றும் போது நகராட்சி மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் பிரதான பைப் லைனும் உடைந்து போனது.
இதனால் நகராட்சியில் உள்ள ஒருசில வார்டுகளை தவிர அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பழனிக்கு பாலாறு அணையில் இருந்து வரும் பிரதான குழாயில் ஒருங்கிணைக்கப்பட்ட நீதிமன்றம் அருகே உள்ள கேட்வால்வை மூடுவதன் மூலம் சிவகிரிப்பட்டி மேல்நிலைத் தொட்டியை தவிர்த்து அனைத்து மேல்நிலைத் தொட்டிகளுக்கும் தண்ணீர் ஏற்ற முடியும். ஆனால் அதை செய்யாமல் நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. பழனி மலைக்கோயிலுக்கு செல்லும் குடிநீர் வினியோகம் முற்றிலும் நின்று பலநாட்களானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குழாய் உடைப்பு குறித்து சம்பவ இடத்துக்கு வந்த மார்க்சிஸ்ட் மாவட்ட நிர்வாகியும், பழனி முன்னாள் நகர்மன்ற தலைவருமான ராஜமாணிக்கம், நகர செயலாளர் குருசாமி, கவுன்சிலர் கந்தசாமி ஆகியோர் வந்து நகராட்சி ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமாரிடம் நகர மக்களின் குறைகள் குறித்து கூறி குழாய் சீரமைப்பை விரைவு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.