நீதிமன்றம் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்போம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுவிக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் எந்த முடிவு எடுத்தாலும், அதை ஏற்கத் தயாராக
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுவிக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் எந்த முடிவு எடுத்தாலும், அதை ஏற்கத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் 3 நாள்களில் விடுவிக்க வேண்டும், இல்லையென்றால் தமிழக அரசே விடுதலை செய்யும் என்று மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் கடிதம் எழுதியுள்ளார். இது அரசியல் ஏமாற்று வேலை என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. அதிமுக ஆட்சிக்கு எதிராக அணி திரண்டு வரும் எதிர்ப்பைச் சந்திக்க முடியாமல், அந்தப் பிரச்னைகளை திசை திருப்பவே இந்த அரசியல் நாடகத்தை ஜெயலலிதா அரங்கேற்றியுள்ளார்.
2008-ஆம் ஆண்டில் ராமேசுவரம் பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ராஜீவ் கொலை ஒரு தேசிய பிரச்னை. இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். இதில், சோனியகாந்தி தலையிடக் கூடாது என்று பேசினார். இதனை யாரும் மறந்துவிட மாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கப்படுவதை நீதிமன்றத்தின் போக்குக்கே விட்டுவிடுவதைத்தான் அணுகுமுறையாகக் கொண்டுள்ளது.
இதில், நீதிமன்றம் எந்த முடிவு எடுத்தாலும், அதை ஏற்க காங்கிரஸ் கட்சியும் தயாராக இருக்கிறது. மாறாக, உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் அதிமுகவின் முயற்சியை தமிழ் மக்கள் நன்றாகவே அறிவர் என்று அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.