பொதுக் கூட்டங்கள்-பேரணிகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம் தகவல்
பொதுக் கூட்டங்கள், பேரணிகளை நடத்த இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுக் கூட்டங்கள், பேரணிகளை நடத்த இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:-
சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நடத்தை நெறிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன.
பொதுக் கூட்டங்கள், பேரணிகளை நடத்த விரும்புவோர் www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த பின், காவல் துறையிடம் தடையின்மைச் சான்றிதழைப் பெற வேண்டும். பிரசார ஊர்வலத்தின் போது, 10 வாகனங்களுக்கு மேலும், மனுதாக்கலின்போது, 3 வாகனங்களுக்கு அதிகமாகவும் பயன்படுத்தக் கூடாது.
வாகனச் சோதனை தீவிரம்: 234 தொகுதிகளிலும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியை மேற்கொள்வர். வாகனங்களில் சோதனை தொடங்கியுள்ளது.
702 சோதனைச் சாவடிகளும், 702 கண்காணிப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். தொகுதிக்கு தலா ஒரு கண்காணிப்புப் படை நியமிக்கப்படும். இந்த ஒவ்வொரு படையிலும் மூன்று பேர் இருப்பர்.
நலத் திட்டங்களுக்கு டோக்கன்கள் கொடுக்கப்படுகிறது போன்ற வகையில், உடனடியாக 3 புகார்கள் வந்தன. அதுகுறித்த நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளோம்.
அரசு திட்டங்களில் படங்கள்: அரசின் சார்பில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது. நடைமுறையில் உள்ள திட்டங்களைத் தொடர எந்தத் தடையும் இல்லை.
மழை வெள்ள நிவாரண நிதியை புதிதாக இனி வழங்க வேண்டுமெனில், அதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.
அம்மா உணவகம், குடிநீர், உப்பு போன்ற அரசு நலத் திட்டங்களில் முதல்வரின் படங்கள் இருந்தால் அதனை மறைப்பதற்கு அறிவுறுத்தப்படும்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது பின்பற்றப்பட்ட அனைத்து நெறிமுறைகளும் இப்போது தொடரும். தேர்தல் பணியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்றார்.
பேட்டியின்போது, இணை தலைமைத் தேர்தல் அதிகாரி (விழிப்புணர்வுப் பிரசாரம்) சிவஞானம், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி கிர்லோஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.