கூடங்குளம் 2ஆவது அணு உலையும் நிறுத்தம்: 2,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது அணு உலை பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்ட நிலையில், 2ஆவது அணு உலையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது அணு உலை பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்ட நிலையில், 2ஆவது அணு உலையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது அணு உலை வருடாந்திர பராமரிப்புப் பணி மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக கடந்த புதன்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2ஆவது அணு உலை வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வருடாந்திர பராமரிப்புப் பணி மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகளுக்காக 152 நாள்கள் நிறுத்தப்பட்டிருந்த 2ஆவது அணுஉலை, கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்கியது. அதன்பிறகு 11 நாள்கள் மட்டுமே இயங்கிய 2ஆவது அணு உலை, டர்பைன் ஜெனரேட்டர் ஆய்வு மற்றும் சோதனைப் பணிகளுக்காக மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் உள்ள இரு அணு உலைகளும் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டதாகும். இந்த இரு அணு உலைகளும் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.