ஸ்டெர்லைட் விவகாரம்: சிபிஐ விசாரணை தேவை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இடமாற்றம் செய்யக் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் நிகழ்ந்த உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆனால், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என முயற்சி நடைபெற்று வருகிறது. சிலைக் கடத்தல் வழக்கில் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் சிறப்பாக விசாரணை செய்து வருகிறார்.
அவரை பலமுறை மாற்றுவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டது. இருப்பினும் நீதிமன்றத்தின் உத்தரவால், அவரை மாற்றும் முயற்சி பலிக்கவில்லை. பொன்மாணிக்கவேலை மாற்றும் முயற்சி உள்நோக்கம் கொண்டது.
பயத்தின் காரணமாகவோ அல்லது யாரையோ காப்பாற்றுவதற்காக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற முயற்சிக்கப்படுகிறது. பொன் மாணிக்கவேலின் பதவி முடிந்தாலும், அவருக்கு பணி நீடிப்பு செய்ய வேண்டும். அப்போதுதான் மேலும் பல சிலைகளை மீட்க முடியும்.
வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கு தயாராக இருக்கிறோம். கூட்டணி வைத்தாலும், இல்லையென்றாலும் 37 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
அதற்காக கூட்டணி தேவையில்லை என்று கூறமாட்டோம். கூட்டணி குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம் என்றார் தினகரன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.