முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பாலூற்றிய வைரமுத்து: உருவான புதிய சர்ச்சை 

சென்னை மெரீனாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், கவிஞர் வைரமுத்து பாலூற்றி அஞ்சலி செலுத்திய சம்பவம் சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

சென்னை: சென்னை மெரீனாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், கவிஞர் வைரமுத்து பாலூற்றி அஞ்சலி செலுத்திய சம்பவம் சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது. 

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். புதனன்று சென்னை ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது பூத உடலுக்கு பெருமளவில் திரண்டு வந்து   அஞ்சலி  செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதியின் உள்ளே நல்லடக்கம் செய்ப்பட்டது.

இந்நிலையில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், கவிஞர் வைரமுத்து பாலூற்றி அஞ்சலி செலுத்திய சம்பவம் சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது. 

வியாழன் காலை கவிஞர் வைரமுத்து தனது மகன்கள் மதன் கார்க்கி மற்றும் கபிலனுடன் அண்ணா நினைவக வளாகத்திற்கு வருகை தந்தார்.அதனை வலம் வந்த அவர் பாட்டில் ஒன்றில் வைத்திருந்த பாலினை ஊற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை நினைத்து பார்க்கவே முடியவில்லை. ஒரு தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமையாக கருணாநிதி சமாதியில் பால் ஊற்றிச் செல்கிறேன். சூரியன் இல்லாமல் விடியல் வருமா என்பதை போல உள்ளது கருணாநிதியின் மறைவு.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனால் வைரமுத்துவின் இந்த செய்கை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமயச் சடங்குகளுக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவற்றை தனது இறுதி வரை கடைபிடித்தவர் கருணாநிதி.

அவரது நல்லடக்கத்தின் போது கூட எந்த விதமான சடங்குகளும் பின்பற்றப்படவில்லை. ஆனால் தற்பொழுது வைரமுத்து தனது செய்கையின் மூலமாக அதற்கு ஓர் களங்கத்தை உண்டாக்கி விட்டார்.

இவ்வாறு பல்வேறு விதமான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.