FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கர்நாடகத்தில் பலத்த மழை தமிழகத்துக்கு 1.16 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு

கர்நாடகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வியாழக்கிழமை விநாடிக்கு 1.16 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டையில் உள்ள கபினியிலிருந்து வியாழக்கிழமை வெளியேற்றப்படும் தண்ணீர்.
பகிர்:

கர்நாடகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வியாழக்கிழமை விநாடிக்கு 1.16 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 1-ஆம் தேதி முதல் 3 மாதங்களாக கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி தவிர துங்கபத்ரா, அல்மாட்டி, நாராயணபுரா, லிங்கனமக்கி, சூப்பா, வரஹி, பத்ரா, கட்டபிரபா, மலபிரபா உள்ளிட்ட அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
வெள்ளப்பெருக்கு: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, பாகமண்டலா பகுதிகளில் சில நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது. அதேபோல, கேரள மாநிலத்தின் வயநாடு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
குடகு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
குடகு மாவட்டம் நீரில் மூழ்கியுள்ளதால், வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. சாலை தொடர்புகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு பாலங்கள், சாலைகள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
அடுத்த 48 மணி நேரங்களில் குடகு மாவட்டத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மைசூரு, குடகு மாவட்ட நிர்வாகங்கள் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளன. 
தண்ணீர் திறப்பு: வியாழக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நொடிக்கு 29,163 கன அடி, கபினி அணைக்கு நொடிக்கு 62,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நொடிக்கு 41,165 கன அடி, கபினி அணையில் இருந்து நொடிக்கு 71,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 
இரு அணைகளில் இருந்தும் வியாழக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி நொடிக்கு 1.16 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 
கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழுமையாக நிரம்பியுள்ளதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக தமிழகத்துக்குத் திறந்து விடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments