ஈரானுடன் வர்த்தகம்: 4 இந்திய நிறுவனங்களுக்குத் தடை விதித்த அமெரிக்கா!
ஈரானிடம் பெட்ரோலியம் சார்ந்த வர்த்தகம் மேற்கொண்ட 4 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
ஈரானிடம் பெட்ரோலியம் சார்ந்த வர்த்தகம் மேற்கொண்ட 4 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
ஈரானில் இருந்து பெட்ரோல் மற்றும் பெட்ரோலுக்கான வேதிப் பொருள்களை இறக்குமதி செய்ததற்காக, இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா சார்பில் நேற்று ‘ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’ என்ற நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. ஈரானின் வருவாய்க்கு வாய்ப்புள்ள அனைத்து வழிகளையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு புதிய பொருளாதாரத் தடைகளை இந்த அறிவிப்பு உள்ளடக்கியுள்ளது.
Advertisement
Advertisement
அதேநேரம், ஈரானுடன் பொருளாதார ரீதியான உறவைத் துண்டிக்குமாறு பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா, அதனை மீறினால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
ஈரானின் நிதி ஆதாரங்களைத் துண்டிப்பதில் முன்னெப்போதும் இல்லாத தீவிர நடவடிக்கையாக இது குறிப்பிடப்பட்டாலும், ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இந்த நடவடிக்கையை எதிர்கொள்ளும் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்களில் 'போர்டீஸ் பார்ட்னர்ஸ் எல்.எல்.பி’ என்கிற சுங்கத் தரகர் நிறுவனமும், அதன் இணை கூட்டாளிகளான இந்திரிஸ்மியா அஷ்ரஃப்மியா ஷேக் மற்றும் ஹரிஷ் ராமச்சந்திர ரங்கி ஆகியோரும் அடங்குவர். ஈரானின் பெட்ரோலிய வேதிப் பொருள்கள் பலவற்றை இறக்குமதி செய்ய அவர்கள் வழிவகுத்ததாக அமெரிக்கா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சதாசிவா ஓவர்சீஸ் லிமிடெட், பிபி சாஃப்டெக் பிரைவேட் லிமிடெட் (இயக்குநர் பிரசாந்த் கார்க்) மற்றும் பிரக்ருதீஸ் இன்ஃப்ரா இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இந்திய நிறுவனங்களும் இந்த நடவடிக்கையில் சிக்கியுள்ளன.
இந்த நிறுவனங்களின் இயக்குநர்களில் ஷேக், ரங்கி மற்றும் கார்க் ஆகியோர் இந்தியக் குடிமக்கள் என்றும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சதாசிவா ஓவர்சீஸ் நிறுவனம் ஈரானின் பல பெட்ரோலிய நிறுவனங்களிடமிருந்து சுமார் 69 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ததாகவும், பிபி சாஃப்டெக் மற்றும் பிரக்ருதீஸ் இன்ஃப்ரா நிறுவனங்கள் தலா 25 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிடம் பெட்ரோல் அல்லது பெட்ரோலியப் பொருட்களை வாங்குவது, கையகப்படுத்துவது, விற்பனை செய்வது மற்றும் சந்தைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈடுபட்டதற்காக 4 நிறுவனங்களும் இந்தத் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், "ஈரான் ஆட்சியின் உறுதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, ஈரானுக்குத் துணைபோகும் பல நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.
The United States has imposed economic sanctions on four Indian companies that engaged in petroleum-related trade with Iran.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.