கலைஞரின் இரண்டாவது நிழலான நித்யா.. கருணாநிதி அப்படித்தான் அழைப்பார்!
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழகத்தையே புரட்டிப்போட்டுவிட்டது. ஓய்வில்லாத அந்த சூரியன் அஸ்தமித்த நிலையில், பலருக்கும் இன்று வெளிச்சம் இல்லாமலேயே விடிந்தது.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழகத்தையே புரட்டிப்போட்டுவிட்டது. ஓய்வில்லாத அந்த சூரியன் அஸ்தமித்த நிலையில், பலருக்கும் இன்று வெளிச்சம் இல்லாமலேயே விடிந்தது.
வயோதிகம் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் நேற்று மெரினாவில் நடைபெற்றது. அண்ணா நிழலில் கருணாநிதி தஞ்சமடைந்தார்.
கருணாநிதி எனும் ஆலமரத்தின் இரண்டாவது நிழலாக விளங்கியவர் நித்யா. ஆம் கருணாநிதி அவரை அப்படித்தான் அழைப்பார். நித்யா எனும் நித்யானந்தத்துக்கு தற்போது 39 வயது.
Advertisement
Advertisement
கருணாநிதிக்கு முதுகெலும்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வீல் சேர் உதவியை நாடியது முதல் கருணாநிதிக்கு இரண்டாவது நிழலாக மாறினார் நித்யா. அதுவரை முக்கியமானப் பணிகளை மட்டும் உடன் இருந்து செய்து வந்த நித்யா, அதன்பிறகு முழு நேரமும் கருணாநிதியுடனேயே இருக்கத் தொடங்கினார். . சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கருணாநிதியுடனேயே இருந்து அவருக்கான உதவிகளை செய்து வந்தார்.
திமுக குடும்ப உறுப்பினர்களில் கருணாநிதியுடனே இருந்த நித்யா, குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே மாறிப்போனார். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நேற்று மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகே கருணாநிதியை நல்லடக்கம் செய்வதற்கு முன்பு, அவரது குடும்ப உறுப்பினர்கள் உப்பிட்டு அஞ்சலி செலுத்தினர். அதில் ஒருவராக நித்யா இடம்பெற்றிருந்தார்.
கருணாநிதியை வைத்திருந்த சந்தனப் பேழை மண்ணுக்குள் இறக்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைப்பிடி மண்ணை அள்ளி குழியில் இட்டபோது, நித்யாவும் அதனைச் செய்தார்.
நித்யாவின் தந்தை திமுக மாவட்ட நிர்வாகியாக இருந்தவர். 1996ம் ஆண்டு திமுக தலைமைக் கழகத்தில் கிளர்க் பணிக்காக நித்யானந்தம் சேர்ந்தார். அவரது அயராத உழைப்பின் காரணமாக க அன்பழகனின் உதவியாளராக பணியாற்றினார்.
நித்யானந்தாவின் சுபாவம், அன்பழகனுக்கு அதிகம் பிடித்துப்போனதால், கருணாநிதிக்கு அறிமுகம் செய்து வைத்தார். 'உனக்கு உதவி செய்ய இந்த இளைஞன் நிச்சயம் சரியாக இருப்பான்' என்று கூறினார். 2006ம் ஆண்டு கருணாநிதி தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு நித்யானந்தம் உதவியாளராக மாறினார். 2007ம் ஆண்டு முதல் நித்யானந்தம் கோபாலபுரம் இல்லத்திலேயே தங்கியிருந்து பணியாற்றினார்.
நிஜத்தை இழந்து தாளாத சோகத்தைத் தன்னுள் கொண்டிருக்கிறார் நிழல் நித்யா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.