கூடுதல் ஆணையரை கைது செய்ய மாட்டோம்: சிலை கடத்தல் பிரிவு உத்தரவாதம்
இந்துசமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் திருமகளைக் கைது செய்ய மாட்டோம் என உயர் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் பிரிவு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்துசமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் திருமகளைக் கைது செய்ய மாட்டோம் என உயர் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் பிரிவு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகக் கோயில்களில் உள்ள பழமையான சிலைகள் கடத்தப்படுவதைத் தடுக்க கோரி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்துசமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள் சார்பில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே, தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
அப்போது அரசு தரப்பு வழக்குரைஞர் ரவிச்சந்திரன் இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் கோரினார். மேலும் கூடுதல் ஆணையர் திருமகளை தற்போது கைது செய்யமாட்டோம் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.