ஸ்ரீரங்கம் கோயில் சிலைகள் விவகாரம்: விசாரணை நடத்த உத்தரவு
ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள சிலைகள் மாயமான விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள சிலைகள் மாயமான விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உற்சவர் மற்றும் மூலவர் சிலைகள் மாயமாகி உள்ளன. மேலும், கோயிலின் பழங்காலப் பொருள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறியதாவது:-கடந்த 2012-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தச் சமயத்தில் திருக்கோயிலில் உள்ள சிலைகள் சீரமைக்கப்பட்டன. சிலைகள் எதுவும் மாயமாகவில்லை. அனைத்துச் சிலைகளும் திருக்கோயிலில் பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளன. பாரம்பரிய கட்டடங்களைச் சிறப்பாக புதுப்பித்தமைக்காக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது '' என்று தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்ரீரங்கம் கோயில் சிலை மாயமானதாக கொடுக்கப்பட்ட புகார் மீது ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு 6 வார காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.