கூடலூர்-உதகை மலைப் பாதையில் விழுந்த பெரிய பாறைகள்
கூடலூர்-உதகை மலைப் பாதையில் புதன்கிழமை இரவு பெரிய பாறைகள் சரிந்து சாலையில் விழுந்ததால் இரவு முழுவதும் கொட்டும் மழையிலும், கடும் குளிரிலும் வனப் பகுதியில் பயணிகள் காத்துக் கிடந்தனர்.
கூடலூர்-உதகை மலைப் பாதையில் புதன்கிழமை இரவு பெரிய பாறைகள் சரிந்து சாலையில் விழுந்ததால் இரவு முழுவதும் கொட்டும் மழையிலும், கடும் குளிரிலும் வனப் பகுதியில் பயணிகள் காத்துக் கிடந்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளைமலை காட்சி முனை பகுதியில் இரவு சுமார் 8 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. பெரிய பாறை சரிந்து சாலையில் விழுந்ததால் சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்தும், உதகையிலிருந்து கர்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திரம் செல்லும் சுற்றுலா வாகனங்களும் கொட்டும் மழையிலும் கடும் குளிரிலும் தவளைமலை வனப் பகுதியில் இரவு முழுவதும் காத்துக் கிடந்தன.
கர்நாடகம்,கேரளம் மற்றும் கூடலூர் பகுதியிலிருந்து சென்ற வாகனங்களை கூடலூர் பஜாரிலேயே போக்குவரத்து காவலர்கள் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது எனக் கூறி தடுத்து நிறுத்திவிட்டனர்.
மீட்பு பணிக்குச் சென்ற தீயணைப்புப் படையினர் பாறைகளை பொக்லைன் இயந்திரங்களால் அகற்ற முடியாத காரணத்தால் திரும்பி வந்துவிட்டனர்.
வியாழக்கிழமை காலை முதலே மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வந்தது. பாறைகளை வெடிவைத்து உடைத்து பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக அகற்றி தாழ்வான பகுதிக்கு தள்ளிவிட்டனர்.
அதைத் தொடர்ந்து, மதியம் சுமார் 1 மணியளவில் வாகனங்களை ஒவ்வொன்றாக அனுப்பி வைத்தனர். நிலச்சரிவு காரணமாக பாறைகள் சாலையில் உருண்டு விழுந்ததால் மலைப்பாதை சேதமடைந்துள்ளது. எனவே, சாலையின் சேதமடைந்த பகுதியை ஒதுக்கி ஒருவழி பாதைபோல வாகனங்களை அனுப்பி வருகின்றனர். மீட்பு பணியை நீலகிரி எஸ்.பி.சண்முகப் பிரியா பார்வையிட்டார்.
உதகை கோட்டாட்சியர் சுரேஷ், கூடலூர் கோட்டாட்சியர் முருகையன், உதகை வட்டாட்சியர் தினேஷ், கூடலூர் வட்டாட்சியர் ரவி, தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்டப் பொறியாளர் சாமியப்பன், உதவிப் பொறியாளர் பிரவீன், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் இளவரசன், பேரிடர் குழு வட்டாட்சியர் குமாரராஜா, கிராம நிர்வாக அலுவலர் பிச்சக்கனி உள்ளிட்டோரும் சம்பவ இடத்தில் மீட்புப் பணியின்போது உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.