பழனியில் ரோப் கார் மீண்டும் இயக்கம்
பழனி மலைக் கோயில் ரோப் கார் 48 நாள்கள் வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்கு பின்னர் வியாழக்கிழமை மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது.
பழனி: பழனி மலைக் கோயில் ரோப் கார் 48 நாள்கள் வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்கு பின்னர் வியாழக்கிழமை மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயில் உச்சியை அடைய ரோப் கார் பயன்பாட்டில் உள்ளது. இரண்டு நிமிட அவகாசத்தில் அடிவாரத்தில் இருந்து மலைக் கோயில் செல்லும் இந்த ரோப் கார், மாதம்தோறும் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி ஜூலை 12ஆம் தேதி வருடாந்திர பராமரிப்புக்காக ரோப் கார் நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ரோப் கார் மேல்தளம் மற்றும் கீழ்தளத்தில் உள்ள சக்கரங்கள் கழற்றப்பட்டு புதிய பேரிங்குகள், புஷ்கள் மாற்றப்பட்டன. மேலும் சுமார் 70 அடி உயரத்தில் வடக்கயிற்றில் பயணிக்கும் சக்கரங்களுக்கும் புதிய உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டன.
பக்தர்கள் அமர்ந்து பயணிக்கும் ரோப் கார் கேபின்கள் பிரித்து எடுக்கப்பட்டு இருக்கைகள், கதவுகள், தாழ்ப்பாள்கள் ஆகியன மாற்றப்பட்டு நிக்கல் பாலீஷ் மற்றும் புதிய வர்ணம் பூசப்பட்டன. மேலும் ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிய வடக்கயிறு, சாப்ட் ஆகியனவும் மாற்றப்பட்டன.
இந்நிலையில், பணிகள் நிறைவு பெற்ற நிலையில் சுமார் 90 மணி நேரம், சோதனை எடைகளுடன் ரோப் கார் இயக்கிப் பார்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரோப் கார் வியாழக்கிழமை மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
முன்னதாக, கீழ்த்தளத்தில் ரோப் கார் பெட்டிகளுக்கும், மோட்டாருக்கும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து 48 நாள்களுக்குப் பிறகு ரோப்கார் பக்தர்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.