காலா படத்திற்கு எதிரான மனு: உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு
காலா படத்திற்கு எதிராக ஜவஹர் என்பவர் தொடர்ந்த மனுவினை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
சென்னை: காலா படத்திற்கு எதிராக ஜவஹர் என்பவர் தொடர்ந்த மனுவினை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காலா'. தமிழகத்தின் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்குச் சென்று, அங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவிப் பகுதியில் செல்வாக்குடன் வாழ்ந்து மறைந்தவர் திரவியம் நாடார். காலா திரைப்படம் அவரது வாழ்வினை அடிப்டையாகக் கொண்டதென்று ஒரு தகவல் கூறப்பட்டது.
இது தொடர்பாக மும்பை கிழக்கு சியான் பகுதியில் வசிக்கும், மறைந்த திரவியம் நாடாரின் மகன் ஜவகர் நாடார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சார்பில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் சையத் எஜாஸ் அப்பாஸ் நக்வி என்பவர் மூலமாக, ரஜினிகாந்துக்கு குறிப்பிட்ட வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
Advertisement
Advertisement
அதில், ‘காலா’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரவியம் நாடாரின் நற்பெயருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இழுக்கு ஏற்படுத்துவது போல அமைந்துள்ளது என்றும், எனவே, இந்த நோட்டீஸ் கிடைத்த 36 மணி நேரத்துக்குள் இதுவரை ‘காலா’ படம் மற்றும் அதன் கதை குறித்து நீங்கள் பொதுவில் கூறி வந்த கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து என் கட்சிக்காரரின் குடும்பத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும் என்றும், இல்லையேல் கிரிமினல் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. அத்துடன் இழப்பீடும் கோரப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்ற நோட்டீசின் பிரதி தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் மற்றும் தணிக்கை குழுவுக்கும் அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
அதேசமயம் ஜவஹர் தரப்பிலிருந்து காலா திரைப்பட வெளியீட்டுக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் காலா படத்திற்கு எதிராக ஜவஹர் என்பவர் தொடர்ந்த மனுவினை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு அநேகமாக புதனன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
காலா திரைப்பட ரிலீசுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இதன் மூலம் எதுவும் புதிய சிக்கல் உருவாகுமா என்பது தெரியவில்லை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.