நீதிமன்றத்தில் சரணடைந்தவர் கைது: காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்த காவல் துறையின் செயலுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்த காவல் துறையின் செயலுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் சிட்டிபாபு என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தோஷ் திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் உதவியுடன் சரணடைந்தார். அப்போது நீதிமன்ற அறைக்குள் நுழைந்த சிங்கநல்லூர் போலீஸார் சந்தோஷை கைது செய்தனர். இந்தச் செயலுக்கு திருப்பூர் பார் கவுன்சில் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு விரிவான அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த அறிக்கையைப் படித்து பார்த்த தலைமை நீதிபதி, போலீஸாரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார். அப்போது, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நீதிமன்ற அவமதிப்பின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் மணிசங்கரிடம் போலீஸாரின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி, இது நாகரிகமான செயலா, இதுபோன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் போலீஸாரின் செயல் கண்டனத்துக்குரியது. நீதிமன்ற அறைக்குள் சென்று யாரையும் கைது செய்யக்கூடாது என்பது கூட போலீஸாருக்கு தெரியவில்லை. இந்த விவகாரத்தில் தொடர்புடைய போலீஸார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' எனக் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் கோரினார். இதனையடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 2 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.