FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக் காலம் நீட்டிப்பு

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வரும் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்யும் சட்ட மசோதா வியாழக்கிழமை நிறைவேறியது.

Updated On : 29 ஜூன் 2018, 4:23 am IST
பகிர்:

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வரும் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்யும் சட்ட மசோதா வியாழக்கிழமை நிறைவேறியது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த இந்த சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதாவை தொடக்க நிலையிலேயே திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் எதிர்த்தன. திமுக சார்பில் மா.சுப்பிரமணியன், மெய்யநாதன், காங்கிரஸ் சார்பில் பிரின்ஸ், விஜயதரணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் அபுபக்கர் ஆகியோர் மசோதாவை எதிர்த்து தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் வார்டு எல்லைகளை வரையறை செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகள், பொது மக்களிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன. 10,950-க்கும் மேற்பட்ட மனுக்கள் நகர்ப்பகுதிகளில் இருந்து பெறப்பட்டு அவைகள் எல்லை வரையறை ஆணையத்தால் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், சென்னை மாநகராட்சி வார்டுகளில் மக்கள் தொகை ஐம்பது சதவீதத்துக்கும் குறைவாகவோ, கூடுதலாகவோ இருக்கும் போது, வரையறை ஆணையத்தால் மீண்டும் பரிசீலனை செய்யவும், ஆய்வு செய்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பதவிக் காலம் நீட்டிப்பு: 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகள் மறுவரையறை செய்யும் பணியை வரையறை ஆணையம் மேற்கொண்டுள்ளது. பல நீதிமன்ற வழக்குகளாலும், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கான தேர்தல் தாமதப்பட்டுள்ளது. எல்லை மறுவரையறை முடிந்த பிறகே உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிட முடியும்.
எனவே, தனி அலுவலர்களின் பதவிக்காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைவதைக் கருத்தில் கொண்டு, அந்தக் காலம் டிசம்பர் 31-ஆம் தேதி வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதற்காக, பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தொடர்பான சட்டங்களைத் திருத்த இந்த சட்ட மசோதா வழி வகை செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரல் வாக்கெடுப்பு மூலம்... இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது. அதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் ஏற்கெனவே உள்ள தனி அலுவலர்களின் பதவிக் காலம் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments