குறைந்த செலவில் உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடக்கம்: டாக்டர் கே.எம்.செரியன்
ஏழை, நடுத்தர மக்களுக்குக் குறைவான கட்டணத்தில் உயர்தரமான மருத்துவச் சிகிச்சை அளிக்க முன்வரும் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
ஏழை, நடுத்தர மக்களுக்குக் குறைவான கட்டணத்தில் உயர்தரமான மருத்துவச் சிகிச்சை அளிக்க முன்வரும் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று ப்ராண்டியர் லைப் லைன் மருத்துவமனை தலைவர் டாக்டர் கே.எம்.செரியன் கூறினார்.
வடசென்னை எருக்கஞ்சேரி கே.வி.டி. மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக கடந்த வாரம் ஈராக் நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஜூம்மா (58) அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த டாக்டர் கே.எம்.செரியன் தலைமையிலான மருத்துவர்கள் என். மதுசங்கர், ஆர்.அனந்தராமன் ஆகியோர் ஜூம்மாவின் இதயத்தில் பிடிஏ எனப்படும் பிறவிக் குறைபாடும், ரத்தக்குழாய் அடைப்பும் ஏற்பட்டிருப்பதை உறுதிசெய்தனர்.
உடனடியாக இரு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதன் மூலம் அவர் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையில் டாக்டர் என். மதுசங்கர், கீர்த்திவாசன், எஸ்.விவேகானந்தன் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழு ஜூம்மாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்தனர். இதன் மூலம் அவருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
இதுதொடர்பாக டாக்டர் கே.எம்.செரியன் செய்தியாளர்களிடம் கூறியது:
அனைத்து வசதிகளும் கொண்ட புறநகர் பகுதி மருத்துவமனைகளிலும் உள்ளூர் நோயாளிகளுக்கு மட்டுமின்றி, வெளிநாட்டு நோயாளிகளுக்கும் உயர்தரமான மருத்துவச் சேவையைக் குறைந்த செலவில் அளிக்க முடியும்.
எருக்கஞ்சேரி கே.வி.டி.மருத்துவமனையில் வெளிநாட்டைச் சேர்ந்த நோயாளி ஜூம்மாவுக்கு எனது தலைமையில் மருத்துவர்கள் என்.மதுசங்கர், கீர்த்திவாசன் உள்ளிட்ட மருத்துவக் குழு இதய அறுவை சிகிச்சை செய்து அவரை காப்பாற்றியுள்ளனர்.
ஏழை, நடுத்தர மக்களுக்கும் உயர்தரமான மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்குடன், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிக அளவில் வசிக்கும் எருக்கஞ்சேரியில், அனைத்து மருத்துவ வசதிகளும் கொண்ட கே.வி.டி. மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் டி.செந்தமிழ் பாரி அண்மையில் எங்களை அணுகினார். ஏற்கெனவே செரியன் இருதய பவுண்டேஷன் அறக்கட்டளை மூலம் புறநகர்ப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த செலவில் தரமான மருத்துவச் சிகிச்சை அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டிருந்தோம்.
தற்போது இரு தரப்பினரும் இணைந்து குறைந்த செலவில் உயர்தர மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளோம். சென்னை புறநகர்ப்பகுதிகளில் வேறு சில மருத்துவமனைகளிலும் இந்த திட்டத்தை விரைவில் விரிவுபடுத்த உள்ளோம் என்றார் டாக்டர் கே.எம்.செரியன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.