நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்: 12 ஆயிரம் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை
பதிவு பெறாத விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில்
பதிவு பெறாத விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏறத்தாழ 12 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளத் துறையில் பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அந்த விசைப்படகுகளை கடலுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேம்பார் முதல் பெரியதாழை வரை உள்ள 22 கடலோர கிராமங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 12 ஆயிரம் நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என நாட்டுப்படகு மீனவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், கடலில் நாட்டுப்படகு மீனவர்களின் வலையை விசைப்படகு மீனவர்கள் சேதப்படுத்தும் நிலை இருந்து வருவதாகவும், பதிவு பெறாத விசைப்படகுகளை கடலுக்குள் அனுமதிக்காமல் மீன்வளத் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அரசின் விதிமுறையை மீறி கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகுகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் நாட்டுப் படகு மீனவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.