தென் மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தம்: திருநாவுக்கரசர், ராமதாஸ் கண்டனம்
தென்மாவட்டங்களில் இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தென்மாவட்டங்களில் இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சு.திருநாவுக்கரசர்: தூத்துக்குடியில் காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டினையும், அதையொட்டி ஏற்பட்ட பிரச்னைகளினாலும் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவைகளை அரசு நிறுத்தி வைத்துள்ளது. தாசில்தார் அலுவலகம் தொடங்கி, கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் சேருவதற்கு இணையதளத்தின் மூலமாகவே மனுக்கள் செய்யவும், சான்றிதழ்கள் பெறவும் வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில் இணையதள சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக இணையதள சேவைகளின் தடையை நீக்க வேண்டும்.
ராமதாஸ்: தூத்துக்குடியில் இணைய சேவையை ஆட்சியாளர்கள் துண்டித்திருப்பது மிகவும் பிற்போக்கான நடவடிக்கையாகும். பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யமுடியால் உள்ளனர். இதனால் 11-ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிலும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களில் பல இடங்களில் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அமைதியை ஏற்படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். இணைய சேவையை மீண்டும் வழங்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.