திருவாரூர் மாவட்டத்தில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி தொடக்கம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, உணவுத் துறை
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனர்.
திருவாரூர் வட்டம் திருநெய்ப்பேர் ஊராட்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 498 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்ணெய், வேஷ்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை அமைச்சர்கள் வழங்கி மருத்துவ முகாமை பார்வையிட்டனர்.
பின்னர், உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தது:
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 205 நிவாரண முகாம்களில் உள்ள குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்படும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள், தென்னை மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 1 லட்சத்து 12 ஆயிரம் வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. ஒரு சில சாலைகளைத் தவிர அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு, பேருந்துகள் இயங்கி வருகிறது. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 1 லட்சத்து 12 ஆயிரத்து 251 பேருக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது என்றார் அமைச்சர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வருவாய்க் கோட்டாட்சியர் முருகதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.