வழக்கில் உரிய நேரத்தில் பதிலளிக்காவிட்டால் அபராதம்: உள்துறைச் செயலருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
அரசுத்துறை தொடர்பான வழக்குகளில் உரிய நேரத்தில் பதிலளிக்காவிட்டால் உள்துறைச்செயலருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
அரசுத்துறை தொடர்பான வழக்குகளில் உரிய நேரத்தில் பதிலளிக்காவிட்டால் உள்துறைச்செயலருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
மதுரையைச் சேர்ந்த சார்பு- ஆய்வாளர் எம்.சுந்தரபாண்டியன், தனக்கு பதவி உயர்வு மற்றும் பண பலன்கள் வழங்கக்கோரி 2016-இல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் உள்துறை செயலர் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் 2016 அக்டோபர் 6-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை பிறப்பித்து 2 ஆண்டுகள் கடந்தும் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பு வழங்கி, விசாரணை செப்டம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால், உள்துறை செயலருக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இப்பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்காக அவரது சொந்த வங்கி கணக்கில் இருந்து செலுத்த உத்தரவிடப்படும். மேலும் உள்துறை செயலர் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்படும்.
ஒவ்வொரு துறையிலும் அரசு வழக்குகளின் நிலை தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்குமாறு கீழ் நிலை அதிகாரிகளுக்கு உள்துறை செயலர் உத்தரவிட வேண்டும். மேலும் இதற்காக ஒவ்வொரு துறையிலும் தனி இணையதளம் அல்லது மின்னஞ்சல் உருவாக்க வேண்டும். அந்த துறை சார்ந்த வழக்குகள் தொடர்பான விவரங்களை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுச்செல்லும் வகையில் இந்த இணையதளம், மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் வழக்குகளின் தொடர் நடவடிக்கையை அதிகாரிகள் கண்காணிக்க முடியும் என்று உத்தரவில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.