FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருச்சி வானொலி நிலைய 80-ஆவது ஆண்டு விழா: ஆண்டு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு

திருச்சி வானொலி நிலையம் தொடங்கி 80 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி ஆண்டு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அதன் நிகழ்ச்சி இயக்குநர் கே. நடராஜன்.

Updated On : 18 மே 2018, 7:48 am IST
பகிர்:

திருச்சி வானொலி நிலையம் தொடங்கி 80 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி ஆண்டு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அதன் நிகழ்ச்சி இயக்குநர் கே. நடராஜன்.
கடந்த 1939 மே 16-ல் தொடங்கப்பட்ட அகில இந்திய திருச்சி வானொலி நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற 80ஆவது ஆண்டு தொடக்க விழாவில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு மங்கள இசை, திருவையாறு பி.வி. ஜெயஸ்ரீ குழுவினரின் பாமாலை நிகழ்ச்சியைச் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார், மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ், முன்னாள் காவல் துறை மாவட்டக் கண்காணிப்பாளர் அ. கலியமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து வானொலி நிலைய நிகழ்ச்சி இயக்குநர் கே. நடராஜன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் மேலும் கூறியது :
இந்த வானொலி நிலையம் பல்வேறு வகையில் பொதுமக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கலை, பண்பாடு, நாகரிகம், மொழி ஆகியவற்றை வளர்க்கும் முக்கிய ஊடகங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வந்துள்ளது. முதல் அலைவரிசை மட்டுமின்றி ரெயின்ஃபோ பண்பலை மூலமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தொலைக்காட்சிகள் வந்த பின்னரும் வானொலியின் சேவைகள் குறையவில்லை. குறிப்பாக ,அன்றாட முக்கியச் செய்திகளை வழங்குதல், வேளாண் பெருமக்களுக்கு தேவையான தகவல்களை அளித்தல், அரசின் திட்டங்களை எடுத்துரைத்தல், கல்வி, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்ச்சிகளை திறம்பட நடத்தியுள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் நிகழ்ச்சிகள்: திருச்சி வானொலியின் 80 ஆவது ஆண்டையொட்டி முதல் அலைவரிசை மற்றும் ரெயின்போ பண்பலை ஆகியவற்றில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் பொதுமக்களுடன் நெருங்கியத் தொடர்புகளை ஏற்படுத்தும் விதமாக முகநூல், சுட்டுரை ( டுவிட்டர்), கட்செவி ( வாட்ஸ் அப்) உள்ளிட்டவை மூலமும் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
இதற்காக பொதுமக்கள் 94865-91021 என்ற வாட்ஸ்அப் எண்ணையும், முகநூல் மற்றும் டுவிட்டரில் ற்ழ்ண்ஸ்ரீட்ஹ் ச்ம் ழ்ஹண்ய்க்ஷர் என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவற்றின் மூலம் ஏராளமான இளையோரின் திறன்களை வெளிக்கொணரவும், சமூகத்துக்கு பயனுள்ள பல அரிய தகவல்களை வழங்கவும் முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது என்றார் அவர்.
நிலைய தொலைத் தொடர்பு பொறியாளரும் துணை இயக்குநருமான எம். வாசுகி, நிலைய உதவி இயக்குநர் எஸ். பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments