கடலூர்: திருட வந்த கடையில் பணம் இல்லாததால் "கல்லாவில் பணம் வைத்து விட்டுப் போக மாட்டீர்களா?: என உரிமையாளரிடம் திருடன் ஒருவன் கேள்வி கேட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அங்கு இவர் ஒரு மளிகைக்கடையை நடத்தி வருகிறார். வழக்கம் போல காலையில் கடையைத் திறந்தவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கடையில் திருட்டு முயற்சி நடந்திருப்பதற்கான அடையாளங்கள் இருந்ததுடன், கடையும் கொஞ்சம் அலங்கோலமாக இருந்துள்ளது. அத்துடன் அங்கு இருந்த ஒரு கடிதம்தான் மிகவும் சுவராஸ்யமே!
அது திருடன் எழுதி வைத்து விட்டுச் சென்றிருந்த கடிதமாகும். அதில் அவன், 'உயிரை பணயம் வைத்து திருட வந்தால், கல்லாவில் பணம் வைப்பதில்லையா?' என்று கேள்வி கேட்டிருந்ததுடன், அதன் காரணமாக கடையில் உள்ள பொருட்களை கலைத்துப் போட்டு குரங்குச் சேட்டை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறான்.
இதைக் கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த ஜெயராஜ் பின்னர் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.அவர்களும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.