காப்பான் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
நடிகர்கள் சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள காப்பான் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடிகர்கள் சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள காப்பான் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் தாக்கல் செய்த மனுவில், நடிகர்கள் மோகன்லால், சூர்யா, ஆர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் காப்பான். இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பணியாற்றி பல கதைகளை எழுதியுள்ளேன். சரவெடி என்னும் தலைப்பில் ஒரு கதையை எழுதினேன். அந்தக் கதையை காப்புரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2016-ஆம் ஆண்டு பதிவு செய்தேன். இந்த கதையை இயக்குநர் கே.வி.ஆனந்திடம் கூறியிருந்தேன். அவர் அதை திரைப்படமாக்கும் போது எனக்கு வாய்ப்பு தருவதாகக் கூறியிருந்தார். அந்த வாய்ப்புக்காக நானும் காத்திருந்தேன். ஆனால் என்னுடைய கதையான சரவெடியை இயக்குநர் கே.வி.ஆனந்த், காப்பான் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். அண்மையில் இந்தத் திரைப்படத்தின் விளம்பரம் தொலைக்காட்சிகளில் வெளியானது. எனது அனுமதி இல்லாமல் என்னுடைய கதையை வேறொரு தலைப்பில் திரைப்படமாக எடுத்துள்ளார். எனவே, இந்தத் திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஏற்கெனவே மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், காப்பான் திரைப்படத்துக்கு தடை விதிக்க மறுத்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.