நாள்தோறும் 15 கி.மீ. நடந்தேசென்று தபால்களை பட்டுவாடா செய்த தபால்காரர்
குன்னுாரிலிருந்து நாள்தோறும் 15 கி.மீ. தொலைவு நடந்துசென்று, பழங்குடியின மக்களுக்கு தபால்களை வழங்கி, பலரையும் வியப்பில் ஆழ்த்திய தபால்காரர் சிவன், தன்னுடைய 65-வது வயதில் நடைக்கு விடைகொடுத்துள்ளார்.
குன்னுாரிலிருந்து நாள்தோறும் 15 கி.மீ. தொலைவு நடந்துசென்று, பழங்குடியின மக்களுக்கு தபால்களை வழங்கி, பலரையும் வியப்பில் ஆழ்த்திய தபால்காரர் சிவன், தன்னுடைய 65-வது வயதில் நடைக்கு விடைகொடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் தபால் நிலையத்தில் கடந்த 30 வருட காலமாக கடிதங்கள் வழங்குவதற்காகவே 15 கிலோமீட்டர் வரை காடு, மலைகளைக் கடந்து பழங்குடியின மக்களுக்கு தபால் வழங்கி வந்த சிவன் கடந்த மார்ச் 7ம் தேதி தனது 65வது வயதில் பணி ஓய்வு பெற்ற தகவல் தாமதமாக தன்னார்வலர்களுக்குக் கிடைத்த நிலையில் தற்போது அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
தனது வாழ்க்கையைப் பழங்குடியின மக்களுக்கு அர்ப்பணித்துள்ள சிவன் தினமணிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறும் போது..
Advertisement
Advertisement
நீலகிரி மாவட்டம் குன்னூர் வன்ணார்பேட்டை பகுதியில் வசித்து இவர் கடந்த 30 ஆண்டுகளாக நாள்தோறும் 15 கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதிக்குச் சென்று ஆதிவாசி மக்களுக்கு தபால்கள் வழங்கி வந்ததாகவும், தான் நடந்து செல்லும் ஹில் குரோவ், ஆடர்லி மற்றும் இதனைச் சுற்றியுள்ள சிறிய சிறிய பழங்குடியினர் கிராமங்களில் வசிக்கும் படிக்கத் தெரியாத ஏழை பழங்குடியின மக்களுக்கு தபால் தருவது, தபால் நிலையத்தில் பணம் கட்டுவது, எடுத்து வருவது எனப் பல பணிகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக செய்து வருவதாகவும்,
கடினமான காடுகள் வழியாக தினமும் 15 கிலோ மீட்டர் வரை காடுகள் வழி பயணிக்கும் காட்டுயானைகள், கரடிகளைக் கடந்து சென்றுள்ளதாகவும், நடக்கும் வழியில் வழுக்கும் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள், ஆகியவற்றைக் கடந்து 30 ஆண்டுகளாக தனது பணியைச் சிறப்பாகவும் மன நிறைவுடனும் செய்து வந்ததாகவும் கூறியுள்ளார், தபால்காரர் சிவன்.
இவரை IAS அதிகாரி சுப்பீரியா சாஹூ தனது ட்விட்டர் பக்கத்தில்..
குன்னூரில் அணுக முடியாத பகுதிகளில் அஞ்சல் வழங்கும் தபால்காரர் சிவன் என்றும் கடினமான காடுகள் வழியாக தினமும் 15 கிலோ மீட்டர் பயணித்தவர், கடந்து 30 ஆண்டுகளாக தனது பணியைச் சிறப்பாகச் செய்த தபால்காரர் சிவன் ஓய்வு பெற்றுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
IPS அதிகாரி விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சிவனின் பங்கு பாராட்டுக்குரியது என குறிப்பிட்டுள்ளார். சிவனின் அயறாதப் அர்ப்பணிப்பு பணி குறித்து பலரும் பாராட்டையும், கருத்தையும் தங்களது இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட தபால்துறை துணை மேற்பார்வையாளர் பானுமதி கூறும்,
கிராமிய தபால்காரர் என்ற பதவியில் பணிபுரிவோருக்கு 4 மணி நேரம் மட்டுமே பணி நேரம் என்றும் இவர்களின் ஓய்வு வயது 65 என்றும் அரசு நிர்ணயித்துள்ளது இவரைப்போன்ற பணியாளர்கள் பகுதி நேர ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டாலும், ஓய்விற்கு முன்பாகவே அனைவரின் பாராட்டையும் சிவன் பெற்றிருப்பது தங்களது துறை சார்பில் பாராட்டு தெரிவித்ததாகத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.