முகப்பு
தமிழ்நாடு

பட்டாசுக் கருந்திரிக் கழிவுகள் தீப்பற்றி வெடித்ததில் இரு சிறுவர்கள் படுகாயம்

விருதுநகர், அருப்புக்கோட்டையில் திங்கள்கிழமை பட்டாசுக் கருந்திரிக் கழிவுகள் தீப்பற்றி வெடித்துச் சிதறியதில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திங்கள்கிழமை பட்டாசுக் கருந்திரிக் கழிவுகள் தீப்பற்றி வெடித்துச் சிதறியதில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்து மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

அருப்புக்கோட்டை காமராசர் நகரையடுத்துள்ள தீர்த்தக்கரை எனும் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் அஸ்வின்(10) மற்றும் அதே பகுதியைச்சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் மலையரசன்(12). இச்சிறுவர்கள் இருவரும் திங்கள்கிழமை பிற்பகல் அப்பகுதியையடுத்துள்ள கண்மாயருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, பட்டாசுக்கருந்திரிகளைக் கழிவுகளைக் கண்டனர். உடன் அச்சிறுவர்கள் இருவரும் ஆபத்தை அறியாது அவற்றைத் தீவைத்துக் கொளுத்தி விளையாடியுள்ளனர்.

அப்போது எதிர்பாராவிதமாக அக்கருந்திரிக் கழிவுகள் திடீரெனத் தீப்பற்றி வெடித்துச் சிதறியதாம். இதில் சிறுவர்கள் இருவரும் படுகாயமடைந்து வலியால் துடித்துள்ளனர். அப்போது, அவர்களது அலறல்  சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தார் ஓடிவந்து சிறுவர்களை மீட்டு, 108 அவசர மீட்பு வாகனம் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் மதுரை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர், தீர்த்தக்கரை பகுதியில் ஆபத்தான பட்டாசுக் கருந்திரிக் கழிவுகளைக் கொட்டியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.