முகப்பு
தமிழ்நாடு

மயிலையில் நாளை இரவு மகாசிவராத்திரி விழா: விரிவான ஏற்பாடு

மயிலாப்பூரில் நாளை இரவு மகாசிவராத்திரி விழா நடைபெறுவதையொட்டி, அங்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 பிப்ரவரி 2022, 1:20 pm IST
மகா சிவராத்திரி சிறப்பு கலை நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழை கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர்கள் வெளியிட்டார்கள்.
பகிர்:

மயிலாப்பூரில் நாளை இரவு மகாசிவராத்திரி விழா நடைபெறுவதையொட்டி, அங்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் வழிகாட்டுதலின்படி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான சென்னை, ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று சிறப்புக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதையொட்டி இன்று 28.02.2022 அருள்மிகு கபாலீசுவரர்  திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் த.காவேரி விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,

Advertisement

Advertisement

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் அமைந்துள்ள ஏழு சிவாலயங்களுக்கு பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. சிவ பக்தர்களுக்கு ஆன்மீக தொடர்பான சொற்பொழிவுகள், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் போன்ற பக்தி சார்ந்த நிகழ்ச்சிகள் 01.03.2022 மாலை 6 மணி முதல் 02.03.2022 காலை 6 மணி வரை நடத்திட ஒரே நேரத்தில் சுமார் 3000 நபர்கள் அமர்ந்து கண்டு களிக்கின்ற வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு வருகின்ற பக்தர்களுக்கு குடிநீர் வசதியும், நடமாடும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட ருத்ராட்சமும், இராமேசுவரம் அருள்மிகு இராமநாத சுவாமி  திருக்கோயிலிலிருந்து புனித தீர்த்தம் வரவழைக்கப்பட்டு வருகின்ற அனைத்து பக்தர்களுக்கும்  வழங்கப்படவுள்ளது. அரங்கத்துக்குள் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதியில்லை. வாகனங்களை நான்கு மாடவீதிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் நிறுத்திகொள்ள வேண்டும்.

கபாலீசுவரர்  திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் த.காவேரி விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டார். 

தமிழ்நாட்டின் முக்கிய திருக்கோயில்களான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிருந்து பஞ்சாமிர்தம், தினைமாவு, மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலிருந்து நெய்தோசை, அப்பம், மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலிருந்து லட்டு, அப்பம், நாமக்கல், அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலிருந்து வடைமாலை உள்ளிட்ட பிரசாதங்கள் விற்பனைக்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய திருக்கோயில்களின் தலபுராணம், தலவரலாறு, திருக்கோயில்களின் வழிகாட்டி நூல்கள் போன்ற அரிய வகை நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பாகவும், உபயதாரர்கள் சார்பாகவும், பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல் பிரசாதம் வழங்கப்படும். பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

திருவாசகத்தின் முக்கிய பகுதியான சிவபுராணம் பாராயணம் ஓதுவார்கள் முழுங்க அதைப் பக்தர்கள் சொல்லுகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் முக்கிய தொலைக்காட்சிகளில் மற்றும் நேரலையாகவும், Youtube channel (http://www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARAR TEMPLE) மூலமாகவும் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ஜெயராமன், உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் தேச மங்கையர்கரசி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் துணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு)  கவேனிதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments