முகப்பு
தமிழ்நாடு

அரசு பேருந்து மீது கல் வீசி தாக்கிய இளைஞர்: காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

அரசு பேருந்து மீது கல் வீசி தாக்கி விட்டு தப்பி ஓடிய இளைஞரை, விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:26 AM
பகிர்:

அரசு பேருந்து மீது கல் வீசி தாக்கி விட்டு தப்பி ஓடிய இளைஞரை, விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர்  மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஊரணிபுரம், வெட்டிக்காடு வழியாக கந்தர்வகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை காட்டாத்தி என்ற இடத்தில் திடீரென ஒருவர் கல் வீசி பேருந்தை தாக்கியுள்ளார். 

இதில் பேருந்தின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடி உடைந்து சிதறியது. இந்த சம்பவத்தால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். அவர்கள் பயந்து அலறி ஓடினர். இதை அடுத்து கல்வீசிய அந்த நபரை  அங்கு நின்ற பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் வயல்வெளியில் தப்பித்து ஓடினார். இருந்தும் பொதுமக்கள் வயல்வெளியில் ஓடி நீண்ட தூரம் சென்று அந்த நபரை பிடித்தனர். 

இது பற்றி அந்த நபரிடம் விசாரித்த போது தான் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் என இந்தியில் கூறியுள்ளார். இதையடுத்து  சம்பவம் நடைபெற்ற காட்டாத்தி கிராமம் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ளதால் கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

மேலும் அவரிடம் எந்த அடையாள அட்டையும்  இல்லாத நிலையில்  அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக கல்வீசி பேருந்தை தாக்கினார்? என்பது பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.