மரணமடைந்த விசாரணை கைதியின் சகோதரர் பரபரப்பு குற்றச்சாட்டு
புகார் கொடுக்காமல் இருக்க காவல்துறை தரப்பில் தங்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுப்பதாக மிரட்டியதாக பலியான விக்னேஷின் சகோதரர் பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார்.
சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்காமல் இருக்க காவல்துறை தரப்பில் தங்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுப்பதாக மிரட்டியதாக பலியான விக்னேஷின் சகோதரர் பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார்.
விசாரணை கைதி விக்னேஷ் மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், அவரது சகோதரர் வினோத், உடற்கூராய்வுக்குப் பிறகும் கூட, விக்னேஷின் உடலைப் பார்க்க குடும்பத்தினரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தில் புகார் கொடுக்காமல் இருக்க எனக்கு ரூ.1 லட்சம் தருவதாக காவலர்கள் கூறினார்கள். எனது சகோதரர் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது. உடற்கூராய்வுக்குப் பின் உடலைப் பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை என்று கூறுகிறார் விக்னேஷின் சகோதரர் வினோத்.
அது மட்டுமல்லாமல், எங்கள் வீட்டின் உரிமையாளரிடம் காவலர்கள் மிரட்டி, உடனடியாக எங்களை வீட்டை காலி செய்யச் சொல்லுமாறும் கூறியுள்ளனர் என்றும் வினோத் குற்றம்சாட்டியுள்ளார்.
தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை இரவு புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஆட்டோவில் இருந்த இளைஞா்கள் இருவரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.
விசாரணையில் பிடிபட்டவா்கள் திருவல்லிக்கேணியைச் சோ்ந்த க.சுரேஷ் என்ற ஜொல்லு சுரேஷ் (28), பட்டினப்பாக்கத்தைச் சோ்ந்த விக்னேஷ் என்ற விக்னா (28) என்பதும், சுரேஷ் மீது 2 கொலை வழக்குகள், 2 கூட்டு கொள்ளை வழக்குகள் உள்பட 6 வழக்குகள், விக்னேஷ் மீது 2 கொள்ளை வழக்குகள் உள்பட 4 வழக்குகளும் இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை விக்னேஷ், வாந்தி எடுத்ததாகவும், பின் வலிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக காவல் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பிறகு, காவல்நிலையத்தில் விசாரணை கைதி இறந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். மேலும் இவ்விவகாரத்தில் உதவி ஆய்வாளர் புகழும்பெருமாள், காவலர் பொன்ராஜ் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.