FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாணவியின் சடலம் மறுகூராய்வு: வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மாணவி சடலத்தை பகல் 1 மணிக்கு மறுகூராய்வு செய்வது தொடர்பான நோட்டீஸ், மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது.

Updated On : 19 ஜூலை 2022, 12:45 pm IST
கள்ளக்குறிச்சி மாணவியின் சடலம் மறுகூராய்வு: வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்
பகிர்:

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மாணவி சடலத்தை பகல் 1 மணிக்கு மறுகூராய்வு செய்வது தொடர்பான நோட்டீஸ், மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில், தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மாணவியின் உடலை, பெற்றோர் இல்லாமலும் மேற்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

மாணவியின் உடலை மறுகூராய்வு செய்யும் போது, மாணவியின் பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் என்றும், வராவிட்டாலும் பகல் 1 மணிக்கு மறுகூராய்வு நடத்தவும் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும், இது தொடர்பான நோட்டீஸ், மாணவியின் பெற்றோர் தங்கியிருக்கும் வீட்டில் ஒட்டப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

மாணவியின் உடலை மறுகூராய்வு செய்யும் போது, மாணவியின் பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் என்றும், வராவிட்டாலும் பகல் 1 மணிக்கு மறுகூராய்வு நடத்தவும் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும், இது தொடர்பான நோட்டீஸ், மாணவியின் பெற்றோர் தங்கியிருக்கும் வீட்டில் ஒட்டப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் மரணம் அடைந்த மாணவியின் உடலை இன்று மறுஉடற்கூராய்வு நடத்த தடையில்லை என்று மாணவியின் தந்தை செய்த முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பகல் 1 மணிக்கு உடற்கூராய்வு செய்யப்படுகிறது.

மறுஉடற்கூராய்வு செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக இன்று விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று நடைபெறவிருக்கும் மறு உடற்கூராய்வுக்கு தடையில்லை என்றும், மனுவை நாளை விசாரணைப்பதாகவும் தெரிவித்து உத்தரவிட்டனர்.

மறுஉடற்கூராய்வுக்கு தங்கள் தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்று திடீரென நீங்கள் கேட்பதை ஏற்க முடியாது என்றும், இன்று மாணவியின் உடற்கூறாய்வை நடத்த தடையில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மாணவி சடலத்தை மறுகூராய்வு செய்யவும், அதை முழுவதுமாக விடியோ பதிவு செய்யவும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தங்கள் தரப்பு மருத்துவரை உடன் இருக்க அனுமதிக்கக் கோரிய தந்தையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். ஆனால் இன்று நடைபெறவிருக்கும் மறுஉடற்கூராய்வுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வந்த தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி, கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பெற்றோர் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த ஞாயிறன்று ஏராளமானோர் பள்ளி முன்பு திரண்டதால் வன்முறையாக மாறி பள்ளி மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னதாக மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், தனது மகளின் சடலத்தை தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, மாணவியின் சடலத்தை மறுகூராய்வு நடத்த உத்தரவிட்டார். விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவா் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவா் ஜூலியானா ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவா் கோகுலநாதன், தடயவியல் துறை ஓய்வுபெற்ற இயக்குநா் சாந்தகுமாரி அடங்கிய குழுவையும் நியமித்து உத்தரவிட்டாா்.

உடற்கூராய்வு முழுவதையும் விடியோ பதிவு செய்ய வேண்டும். மாணவியின் தந்தை வழக்குரைஞருடன் உடற்கூறாய்வின்போது கலந்து கொள்ளலாம். இந்த வழக்கு தொடா்பாக மாணவியின் பெற்றோா் தொலைக்காட்சி உள்ளிட்டவற்றுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது. ஊடகங்கள் விசாரணை மேற்கொள்ளக் கூடாது. மறுஉடற்கூராய்வுக்குப் பின், மாணவியின் உடலுக்கு அமைதியான முறையில் இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

உடற்கூறாய்வை நிறுத்தி வைக்க மறுப்பு
மாணவியின் சடலம் மறுகூறாய்வின்போது தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்கவும், அதுவரை மறுகூராய்வு உத்தரவை நிறுத்திவைக்கவும் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.

இதைத் தொடா்ந்து, நீதிபதி சதீஷ்குமாா் முன் மாணவியின் தந்தை தரப்பு வழக்குரைஞா் மீண்டும் ஆஜராகி, தங்கள் தரப்பில் குறிப்பிடும் மருத்துவரை மறுஉடற்கூறாய்வில் சோ்க்க வேண்டும் என முறையிட்டாா். இந்த வழக்கில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது என்று நீதிபதி தெரிவித்தாா்.

அப்போது, மாணவியின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த தீா்ப்பில் தங்களுக்கு திருப்தி இல்லை. உச்சநீதிமன்றத்தில் இதுதொடா்பாக முறையீடு செய்யவிருப்பதால், மறுகூறாய்வை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றாா். இந்த கோரிக்கையை நீதிபதி சதீஷ்குமாா் நிராகரித்ததுடன், மறுஉடற்கூறாய்வை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டாா். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்திலும் இன்று நடைபெறும் மறுஉடற்கூராய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments