அதிமுகவில் புதிதாக 14 மாவட்டச் செயலாளர்கள் நியமனம்: ஓபிஎஸ் அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள 14 மாவட்ட செயலாளர்களுக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் மீண்டும் சேர்க்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள 14 மாவட்ட செயலாளர்களுக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ வி.என்.பி.வெங்கட்ராமன், ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளராக ஆர்.தர்மர், மதுரை மாவட்டக் கழகச் செயலாளராக ஆர்.கோபாகிருஷ்ணன், கோவை மாவட்ட கழகச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ கோவை கே.செல்வராஜ், வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளராக கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளராக எம்.எம்.பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட கழகச் செயலாளராக ரெட்சன் சி. அம்பிகாபதி, வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழகச் செயலாளராக ஜே.கே.ரமேஷ், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக எம்.ஆர்.ராஜ்மோகன், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளராக டி.மகிழன்பன், சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளராக ஆர்.வி.ரஞ்சித் குமார், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளராக என்.சிவலிங்கமுத்து, தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக வி.கே.கணபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அதிமுகவில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதிக் கழகச் செயலாளர் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்கள் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள் மீண்டும் அந்தந்தப் பொறுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுவதாகவும், காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.