முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு புத்தகத் திருவிழா: காணொலி வாயிலாக ஆக. 5ல் தொடக்கி வைக்கிறார் முதல்வர்

ஈரோடு புத்தகத் திருவிழாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் வரும் ஆகஸ்ட் 5 மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார்.

Updated On : 26 ஜூலை 2022, 3:06 pm IST
ஈரோடு புத்தகத் திருவிழா அறிவிப்பு
பகிர்:


ஈரோடு: ஈரோடு புத்தகத் திருவிழாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் வரும் ஆகஸ்ட் 5 மாலை 5 மணிக்கு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார் என்று மக்கள் சிந்தனை பேரவை மாநில தலைவர் மற்றும் வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன் கூறினார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பேரவை நடத்தும் 18வது புத்தகத் திருவிழா இது கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக நடைபெறவில்லை.  எனினும் காணொலி காட்சி மூலம் புத்தகத் திருவிழா நடைபெறும் ஆகஸ்ட் மாதத்தில் சிறந்த தமிழ் அறிஞர்களின் சொற்பொழிவுகள் இணையதளம் மூலம் ஒளிபரப்பப்பட்டது.

பேரவையின் 24 ஆவது ஆண்டில் நடத்தும் தற்போதைய கண்காட்சியை முதல்வர் துவக்கி வைக்க வருவதாக இருந்தது. சில காரணங்களால் அவர் வர இயலவில்லை. எனவே காணொலி காட்சி மூலம் அவர் புத்தகத் திருவிழாவை துவக்கி வைக்கிறார். வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி உட்பட பல உயர் அரசு அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

Advertisement

வழக்கம் போல் எந்த நுழைவுக் கட்டணமும் இல்லை. ஆகஸ்ட் 5 முதல் 16 வரை ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி திடலில் புத்தகத் திருவிழா 230 க்கும் மேற்பட்ட அரங்குகள் உடன் நடைபெறுகிறது. ஒவ்வொருநாளும் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்கள், கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் மாலை நேர நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். ஒன்பதாம் தேதி  வெளிநாடுகளைச் சேர்ந்த 10 தமிழறிஞர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. எட்டாம் தேதி இளம் அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஒருவருக்கு ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பரிசுடன் கூடிய ஜிடி நாயுடு விருது வழங்கப்படுகிறது.

உலக தமிழ் பல்கலைக்கழகம் தமிழராய்ச்சி நிறுவனம் தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் மத்திய மாநில புத்தக பதிப்பாளர்கள், இந்திய மற்றும் பன்னாட்டு  பதிப்பாளர்கள்  விழாவில் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை எழுத்தாளர்களின் புதிய படைப்புகள் இவ்விழாவில் வெளியிடப்படும். புதிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் பதிப்பிக்க மக்கள் சிந்தனைப் பேரவை உதவும். இதுவரை அவ்வாறு 100 புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு 10 சதமும் பள்ளி கல்லூரிகளுக்கு 10 முதல் 50 சதம் வரை விலையில் தள்ளுபடி வழங்க பதிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.

புத்தகம் வாங்கும் பழக்கம் மற்றும் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மாணவ-மாணவிகளுக்கு சலுகை விலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உண்டியல்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

சாலமன் பாப்பையா, பாலசுந்தரம், சங்கர சுப்பிரமணியன், திரைப்படக் கலைஞர்லெனின்,  சுகிசிவம், ஜேம்ஸ் வசந்தகுமார், தமிழருவிமணியன், நடிகர் சிவக்குமார் போன்ற அறிஞர்கள் விழாவில் தினசரி நடைபெறும் இலக்கிய சொற்பொழிவில் கலந்து கொள்கின்றனர்.

சுதந்திர திருநாளை முன்னிட்டு 15ஆம் தேதி வேலுநாச்சியார் நாடகமும் 16ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதிக்கு பாராட்டு விழாவும் நடைபெறுகிறது என்று அவர் கூறினார். பேரவைச் செயலர் அன்பரசு பொருளாளர் அன்பழகன் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.