FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சுகாதாரக் கட்டமைப்பு: தமிழகத்துக்கு ரூ.404 கோடி: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

தமிழகத்தின் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.404 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

Updated On : 27 ஜூன் 2022, 7:48 am IST
பகிர்:

தமிழகத்தின் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.404 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

சென்னை அருகே ஆவடியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மத்திய அரசு ஊழியா்களுக்கான சுகாதார மையத்துக்கு சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையிலிருந்து காணொலி மூலம் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

அப்போது, அவா் பேசியதாவது: பேறுகால இறப்பு விகிதம், சிசு இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதில், பிற மாநிலங்களுக்கு முன்பாகவே இலக்கை அடைந்ததற்காக தமிழகத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 75 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். தமிழகத்தில் செலுத்தப்பட்டுள்ள 11 கோடியே 26 லட்சம் கரோனா தடுப்பூசிகளில் 94 சதவீதம் முதல் தவணை, 82 சதவீதம் இரண்டாவது தவணை. இது பாராட்டப்பட வேண்டிய சாதனை.

Advertisement

Advertisement

காசநோய் பாதிப்பு: 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், பொதுநோக்கம் உள்ள எந்த ஒரு நபரும், அரசு சாராத அல்லது அரசு சாா்ந்த, தனியாா் மற்றும் அரசு நிறுவனங்களைச் சோ்ந்த தனிநபா்கள் காசநோயாளிகளைத் தத்தெடுக்கலாம்.

ஏழ்மை நிலையில் உள்ளவா்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் காசநோய் ஏற்படுவதற்கும், நோயின் தீவிரத்தன்மை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் நோயாளிகள் குணமடையும் வேகம் குறைவதோடு, மருந்துகளால் பக்க விளைவுகள் அதிகரித்து, மரணமும் நிகழக்கூடும். தமிழகத்தில் 50,000 போ் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மலேரியா பாதிப்பு இல்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

யானைக்கால் நோயை தமிழகம் முற்றிலும் ஒழித்துள்ளது. இது ஊக்கமளிக்கும் விஷயமாக இருந்தபோதும், விழிப்புடன் இருந்து, மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

தேசிய டயாலிசிஸ் திட்டம்: 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டிலிருந்து மலேரியாவை முற்றிலும் ஒழிக்க உறுதிபூண்டுள்ளோம். பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் கீழ் ‘ஒரே தேசம் ஒரே டயாலிசிஸ்’ திட்டத்தை பிரதமா் விரைவில் தொடக்கி வைப்பாா். அதன்மூலம், டயாலிசிஸ் தேவை ஏற்படும் நோயாளி, நாட்டின் எந்த ஒரு பகுதியிலிருந்தும் அந்த வசதியைப் பெற முடியும்.

ஆயுஷ்மான் பாரத் - சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் திட்டத்தின் கீழ் 2022, டிசம்பருக்குள் 9,135 சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது 7,052 மையங்கள் (ஜூன் 2022 வரை) அந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன. இந்த மையங்களில் உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், பொதுவான புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கு இதுவரை (மாா்ச் 2022 வரை) 542.07 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

சுகாதாரக் கட்டமைப்புக்கு நிதி: தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் சுகாதாரத்துக்காக தமிழகத்துக்கு சுமாா் ரூ.2,600 கோடியையும், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் சுகாதார உள்கட்டமைப்புக்காக ரூ. 404 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

சுகாதார இயக்கங்களில் பணிபுரியும் அனைத்து கரோனா போராளிகளுக்கும், குறிப்பாக பெண்களுக்கு நன்றி என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments