பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு!
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர்: தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நம்முடைய தமிழக தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச சூழலும் ராஜபட்ச ஆட்சிக்கு எதிராக வெடித்து கிளம்பிய இலங்கை மக்களின் போராட்டமான இந்தச் சூழலில் தமிழ் தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்தச் சூழலில் தமிழின தேசியத் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
Advertisement
Advertisement
இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பிய யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இந்தச் செய்தி மூலம் உறுதியான முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன்.
தமிழின மக்களின் விடுதலைக்கான திட்டத்தினை அவர் விரைவில் அறிவிக்க இருப்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன். தமிழின மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன்.
விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம்வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அவர்கள் அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதுவாக இருந்தாலும், எந்தக் காலகட்டத்திலும் அவர்களிடமிருந்து எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழின தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்.
இப்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவுக்கு எதிரான களமாக மாற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்து மகாகடலின் சீனாவின் ஆதிக்கம் செலுத்தும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதனை தடுக்கும் வகையில் உறுதியான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழின தேசிய தலைவர் பிரபாகரனுக்கு துணை நிற்குமாறு வேண்டிக் கேட்கிறோம்.
பிரபாகரனின் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பின் மூலம் அறிந்த செய்தியை அவருடைய அனுமதியின் பேரில் இங்கே வெளியிடுகிறேன்.
எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என்பது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் உலகம் முழுவதும் உள்ள நம்முடைய தமிழர்களுக்கும் ஆவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.
ஆனால், விரைவில் அவர் வெளிப்படுவார். அதை உலகம் அறிந்து கொள்ளும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை ராணுவம்!
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கவிஞர் காசி ஆனந்தன், உலகத் தமிழர் பேரமைப்பு துணைத் தலைவர் அய்யனாபுரம் சி. முருகேசன், வழக்குரைஞர் அ. நல்லதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.