முகநூல் பழக்கம், பாலியல் அத்துமீறல்! சேலத்தில் இரு சிறை வார்டன்கள் கைது!!
சேலம் மத்திய சிறைச்சாலை வார்டன்கள் 2 பேர், பேஸ்புக் மூலம் நட்பாக பழகிய இளம்பெண்ணிடம் காதலிப்பதாகக் கூறி, மிரட்டி உல்லாசமாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: சேலம் மத்திய சிறைச்சாலை வார்டன்கள் 2 பேர், பேஸ்புக் மூலம் நட்பாக பழகிய இளம்பெண்ணிடம் காதலிப்பதாகக் கூறி, மிரட்டி உல்லாசமாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் சேலம் மத்திய சிறை வார்டன்கள் அருண் மற்றும் சிவசங்கர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு 11 மணி அளவில் சேலம் மத்திய சிறைச்சாலை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற சேலம் மாநகர போலீசார், சந்தேகத்தின் பெயரில் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது, சிறையில் பணியாற்றும் வார்டன் ஒருவர் தன்னை காதலிப்பதாகவும் அவருக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்ததோடு, இரண்டு வார்டன்கள் தன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு, தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், தற்போது பத்திரமாக வீட்டுக்குச் சென்று விட்டு, காலையில் அஸ்தம்பட்டி காவல் நிலையம் வந்து புகார் தெரிவிக்குமாறு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று அஸ்தம்பட்டி காவல் நிலையம் வந்த இளம்பெண், பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | பொங்கல்: இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை!
அதில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சேலம் சிறை முன்பாக நின்றிருந்தபோது வார்டன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது என்றும் பிறகு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மூலம் நட்பாக பழகி வந்த நிலையில் , அந்த வார்டன் திடீரென ஒரு நாள் தனது குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார். அங்கு காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, தன்னிடம் உல்லாசமாக இருந்தார். இதைப் பார்த்துவிட்ட இன்னொரு வார்டன் அங்கு வந்து, என்னை மிரட்டி தவறாக நடந்து கொண்டார்.
உல்லாசமாக இருக்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து கொண்டு, அந்தக் காட்சிகளை வைத்துக்கொண்டு மிரட்டி அடிக்கடி உல்லாசத்திற்கு அழைக்கின்றனர். எனவே அவர்களை கைது செய்து ஆபாசமாக எடுத்த வீடியோ காட்சிகளை அழிக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.
இதனையடுத்து சேலம் மத்திய சிறையில் பணியாற்றும் இரண்டாம் நிலை சிறைவார்டன்கள் அருண் மற்றும் சிவசங்கர் ஆகிய இருவரையும் அஸ்தம்பட்டி போலீசார் அழைத்து வந்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருண் மற்றும் சிவசங்கர் ஆகிய இரண்டு வார்டன்களும் இளம் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனவே அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இளம் பெண் ஒருவரிடம் பேஸ்புக் மூலம் பழகி அவரை தனியாக அழைத்து உல்லாசத்தில் ஈடுபட்ட சேலம் மத்திய சிறைச்சாலை வார்டன்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.