முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு: மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி கைது

கவுந்தப்பாடி அருகே நள்ளிரவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட அண்ணனை அரிவாளால் வெட்டிக் கொன்ற தம்பியை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:06 PM
பகிர்:

கவுந்தப்பாடி அருகே நள்ளிரவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட அண்ணனை அரிவாளால் வெட்டிக் கொன்ற தம்பியை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம்,  கவுந்தப்பாடி அருகே உள்ள சூரநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு சதீஷ்குமார்(34). நகுலன் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் குப்புசாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சதீஷ்குமார் மரம் அறுக்கும் ஆலையில் வேலை பார்த்து வந்தார். நகுலன் பவானி அருகே உள்ள காடையாம்பட்டியில் சாய தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அண்ணன்- தம்பி இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. சதீஷ்குமாருக்கு மதுபழக்கம் இருந்து வந்துள்ளது. 

இதனால் மதுபோதையில் கிராமத்தில் உள்ள பலரிடமும் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, சதீஸ்குமார் மதுபோதையில், அதே பகுதியைச் சேர்ந்த இருவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதை பார்த்த அவரது தம்பி நகுலன் அண்ணன் சதீஷ்குமாரை வீட்டிற்கு அழைத்துச்சென்று உள்ளார். வீட்டிற்கு சென்ற பின்பு சதீஷ்குமார் அங்கு இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு அவரிடம் தகராறு செய்த இருவரை வெட்டிக் கொலை செய்ய போவதாக புறப்பட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அவரது தாய் மகாலட்சுமி,  சதீஷ்குமாரை தடுக்க முயன்றார். 

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அவரிடமும் தகராறு செய்து மகாலட்சுமியை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அதை பார்த்த நகுலன், அண்ணன் சதீஷ்குமாரை தடுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சதீஷ்குமார் கீழே விழுந்துள்ளார். அப்போது அவர் வைத்திருந்த அரிவாளை பிடுங்கிய நகுலன் ஆத்திரத்தில் சதீஷ்குமாரை கழுத்தில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீஸார் சதீஷ்குமார் வீட்டுக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து நகுலனை கைது செய்தனர். மதுபோதையில் தகராறு செய்த அண்ணனை தம்பியே அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.