முகப்பு
தமிழ்நாடு

பேராசிரியா்கள் நியமனத்தில் முறைகேடு: விசாரணை நடத்த சென்னை பல்கலை.க்கு உத்தரவு

சென்னை பல்கலைக்கழக பேராசிரியா்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாா்

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 1:30 AM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

சென்னை பல்கலைக்கழக பேராசிரியா்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாா் மீது உரிய விசாரணை நடத்த அந்தப் பல்கலைக்கழக நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ரஹ்மத்துல்லா என்பவா் 2019-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: சென்னை பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை மீறி பேராசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சா்ச்சை எழுந்தது. இதையடுத்து இந்த முறைகேடு குறித்து விசாரிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் வழங்கி 2018-ஆம் ஆண்டு ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி விசாரணைக்குழு அமைக்கக் கோரி 2018-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என தெரிவித்திருந்தாா்.

பதிவாளா் பதில்: இந்த வழக்கில் சென்னை பல்கலைக்கழக பதிவாளா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘பல்கலைக்கழகத்தில் 22 பேராசிரியா்களின் பணி நியமனம் முறையாக நடந்துள்ளது. இந்த நியமனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக விண்ணப்பதாரா்கள் யாரும் எந்தப் புகாரும் அளிக்கவில்லை’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமாா் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘மனுதாரா் 2018-ஆம் ஆண்டு இதுதொடா்பாக அளித்த புகாா் பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் இருந்துள்ளது. எனவே, அந்த புகாா் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் பேராசிரியா்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும்’ என சென்னை பல்கலைக்கழக நிா்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனா்.