அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி, தனது ஆண் நபருடன் திங்கள்கிழமை இரவு கல்லூரி வளாகத்தில் தனியாக பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு அடையாளம் தெரியாத இருவர் வந்து, மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுத்து மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக ஞானசேகரன்(33) என்பவரை கைது செய்துள்ளனர்.
கல்லூரி வளாகத்திலேயே மாணவி ஒருவருக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.
இதையும் படிக்க | அஜர்பைஜான் விமான விபத்துக்கு பறவை மோதியது காரணமா?
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வன்கொடுமை செயலை கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி கிடைப்பதற்கு தேசிய மகளிர் ஆணையம் துணை நிற்கும் என்றும்
பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்திய அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுகுறித்து காவல்துறை அறிக்கை அளிக்க வேண்டும்,
பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவியும் வழங்க தமிழக டிஜிபிக்கு மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் உத்தரவிட்டுள்ளார்.