சென்னையில் டிச.31 - ஜன.1 வரை கடலில் குளிக்கத் தடை
புத்தாண்டையொட்டி டிச.31 மாலை முதல் ஜன.1 வரை கடலில் குளிக்கவோ, இறங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண், தலைமையில் 2025-ம் ஆண்டு புத்தாண்டு நாளையொட்டி பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பகாவும் புத்தாண்டு கொண்டாட இன்று (28.12.2024) காவல் ஆணையாளர் அலுவலகத்தில், காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் சென்னை பெருநகரில் பணிபுரியும் கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர். 31.12.2024 அன்று இரவு 9.00 மணியிலிருந்து காவல் அதிகாரிகள் மற்றும் ஊர்க்காவல் படையினர் மூலம் கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிக் கவனம் செலுத்தி பாதுகாப்பை அதிகரிக்க காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை தடுத்தல், அதிவேகமாக செல்லும் வாகனங்களையும், இருசக்கர வாகன வேக பந்தயத்தில் ஈடுபடுவர்களையும் தடுத்து கண்காணிக்க கண்காணிப்பு சோதனை குழுக்களை அமைத்து விபத்தில்லா புத்தாண்டு கொண்டாடுவதற்கு காவல் துறை பணி சிறப்பாக செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31.12.2024 மாலை முதல் 01.01.2025 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை, கடற்கரையோரங்களில் உரிய தடுப்புகள் அமைத்து முன்னேற்பாடுகள் செய்யவும், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் அதிகாரிகள், குதிரைப்படைகள் மற்றும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தவும். மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் உதவி மைய கூடாரங்கள் அமைத்தும், முக்கிய இடங்களில் டிரோன் கேமிராக்கள் மூலம் கண்காணித்து குற்றத் தடுப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.
கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் யாரும் மூழ்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் இறப்பில் காங்கிரஸ் மலிவான அரசியல் செய்கிறது: பாஜக குற்றச்சாட்டு
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வழக்குப் பதிவு செய்ய நேரிட்டால் பாஸ்போர்ட், வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளின் விண்ணப்பங்கள் போலீஸாரால் சரிபார்ப்பு செய்யும்போது பாதிப்பு ஏற்படும் என்பதால் இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.