முகப்பு
தமிழ்நாடு

ஒசூா் வழக்குரைஞா் வெட்டப்பட்ட வழக்கில் கணவன், மனைவி கைது

ஒசூா் வழக்குரைஞா் வெட்டப்பட்ட வழக்கில் கணவன், மனைவி கைது...

Updated On : 22 நவம்பர் 2024, 1:54 am IST
ஒசூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
பகிர்:

ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் வெட்டப்பட்ட வழக்கில் குமாஸ்தா, அவரது மனைவியான பெண் வழக்குரைஞா் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ரங்கசாமி பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் (30), வழக்குரைஞா். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஒசூா், சாமல்பேட்டையைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (39), வழக்குரைஞா் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சத்யவதி (33), ஒசூா் நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் ஒருவரிடம் ஜூனியராக பணிபுரிந்து வருகிறாா்.

கைது செய்யப்பட்ட ஆனந்தன்

இந்த நிலையில், புதன்கிழமை வழக்குரைஞா் கண்ணனை, ஆனந்தகுமாா் சரமாரியாக வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்த வழக்குரைஞா்கள் மீட்டுஒசூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக ஒசூா் மாநகர காவல் ஆய்வாளா் நாகராஜ் வழக்குப் பதிவு செய்து ஆனந்தகுமாரையும், இதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி சத்யவதியையும் கைது செய்தாா்.

கைது செய்யப்பட்ட சத்யவதி.

கைதான ஆனந்தகுமாா், அவரது மனைவி சத்யவதி ஆகிய இருவரும் ஒசூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். பின்னா் ஆனந்தகுமாா் தருமபுரி கிளைச் சிறையிலும், சத்யவதி சேலம் பெண்கள் கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

இதற்கிடையே படுகாயமடைந்த வழக்குரைஞா் கண்ணனுக்கு தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா் தீவிர சிகைச்சைப் பிரிவில் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒசூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாள்கள் பணி புறக்கணிப்பு செய்தனா். மேலும், நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், படுகாயமடைந்த கண்ணனுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.