கவின் உடலைப் பெற பெற்றோர் சம்மதம்!
கவின் உடலைப் பெற பெற்றோர் சம்மதம் தெரிவித்திருப்பது பற்றி...
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் உடலைப் பெற அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ், நெல்லையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆணவக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையை செய்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இதனிடையே, காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோருக்கு இந்த கொலையில் சம்மதம் இருப்பதாக புகார் தெரிவித்த கவினின் பெற்றோர், அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப் பெற மாட்டோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, சுர்ஜித்தின் பெற்றோரை இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் சேர்த்தனர். வழக்கின் விசாரணை காரணமாக அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, கடந்த புதன்கிழமை கவின் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், அன்றிரவே சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார்.
சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என கவினின் உறவினர்கள் கோரிய நிலையில், அரசு தரப்பில் உடலைப் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 5 நாள்களுக்குப் பிறகு கவினின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இன்னும் சற்றுநேரத்தில் பெற்றோரிடம் கவினின் உடல் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில், இன்று மாலைக்குள் இறுதிச் சடங்கு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.