திருப்பூரில் ரூ. 3,000 கோடி வர்த்தக பாதிப்பு! மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்!
திருப்பூர் ஆயத்த ஆடை துறையை பாதுகாக்க மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்...
அமெரிக்காவின் வரி விதிப்பால் திருப்பூர் ஆயத்த ஆடை துறையில் ரூ. 3,000 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆயத்த ஆடை துறையை பாதுகாக்க உடனடி நிவாரணத்தை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் நிறைவேறாததால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரி விதியை டிரம்ப் விதித்தார்.
Advertisement
Advertisement
அதைத் தொடா்ந்து, ‘உக்ரைன் மீது போா் தொடுத்து வரும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வரவில்லை என்று குற்றஞ்சாட்டி, இந்திய பொருள்களுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்தாா்.
இதன்மூலம், புதன்கிழமை முதல் இந்தியா இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு மொத்தம் 50 சதவீத வரியை அமெரிக்கா விதிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ரூ. 3,000 கோடி வர்த்தக இழப்பு நேரிடும் எனவும், இதனை ஈடுசெய்யும் வகையில் டியூட்டி டிரா பேக் சதவீதத்தை அதிகரித்தல், தொழில் கடனுக்கு வட்டி மானியம் அதிகரித்தல், அவசர கால கடன் போன்ற சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த செய்தியை பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால், தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். இதனால், கிட்டத்திட்ட ரூ. 3,000 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைகள் ஆபத்தில் உள்ளன.
நமது தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.