திருப்பரங்குன்றம் மலை மீது சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் 10 நபர்களுடன் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற போதிய பாதுகாப்பை வழங்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த ராம. ரவிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் ஒன்று. திருப்பரங்குன்றம் மலை தொடா்பான வழக்கில், அதன் உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், திருப்பரங்குன்றத்தில் இந்த ஆண்டு காா்த்திகை திருவிழாவின் போது, மலையின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாமல், அங்குள்ள பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் ஏற்ற முடிவு செய்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல.
எனவே, இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட வேண்டும். பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் காா்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடா்பான அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலைக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை, வஃக்ப் வாரியம் ஆகிய தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இந்த ஆண்டு முதல் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு போதிய பாதுகாப்பை காவல் துறையினா் அளிக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றார் நீதிபதி.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படை(CISF) வீரர்கள் பாதுகாப்புடன் மனுதாரர் 10 நபர்களுடன் சென்று தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் இந்து சமய அறநிலையத்துறை விளக்கேற்றாததால் திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பான பதட்டமான சூழல் காணப்படுகிறது. இதனால், திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல, இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.