திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை ரத்து செய்ததுடன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மனுதாரரின் கோரிக்கைக்கு ஏற்ப, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள பழமையான தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
ஆனால் தமிழக அரசும் காவல்துறையும் இதனை செயல்படுத்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு சரியே என தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே விசாரிப்பார் என்றும் கூறியது.
அதன்படி, திருப்பரங்குன்றம் வழக்கு மீன்றும் இன்று மாலை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனி நீதிபதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
மதுரை காவல் ஆணையர் லோகநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் இருவரும் காணொலி மூலமாக ஆஜராகினர்.
அப்போது, 'நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் நீங்கள் அதை செயல்படுத்தவில்லை?' என்று நீதிபதி கேட்க, 'பதற்ற சூழ்நிலை இருந்ததால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, அசம்பாவிதத்தைத் தவிர்க்க அவ்வாறு செய்யப்பட்டது' என்று விளக்கம் அளித்தனர்.
இறுதியில் நீதிபதி கூறுகையில், "மதுரை காவல் ஆணையர் போதிய பாதுகாப்பு வழங்கியிருந்தால் தேவையற்ற பிரச்னை வந்திருக்காது. இது பெரிய பிரச்னையாக மாறியிருக்காது.
காவல் ஆணையர், நீதிமன்றத்தைவிட தன்னை உயர்வாக எண்ணியுள்ளார். மனுதாரர் தீபம் ஏற்ற சென்றபோது காவல் ஆணையர் தடுத்துள்ளார்.
144 தடை உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இன்றே தீபம் ஏற்றப்பட வேண்டும். மதுரை காவல் ஆணையர் இதற்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தீபம் ஏற்றப்பட்டதும் அது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.