இரவு நேர தூய்மைப் பணி! அரசு கவனிக்க வேண்டியது அவசியம்!
இரவு நேர தூய்மைப் பணியின்போது, தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
சென்னை: ஆழ்வார்பேட்டை பகுதியில் இரவு நேர பணியில் இருந்த தூய்மைப் பணி வாகனம் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், தூய்மைப் பணியாளர் காயமடைந்திருக்கிறார்.
மேலும், ஆழ்வார்பேட்டை அருகே, அதிவேகமாக வந்த கார் மோதி, தூய்மை பணியாளர்கள் காயம் அடைந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இரவு நேர சாலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Advertisement
Advertisement
அப்போது எதிரே வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சென்னை மாநகராட்சி வாகனம் மீது மோதியதில், விபத்துக்குள்ளானது. அப்போது அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தூய்மை பணியாளரின் தலையில் காயம் ஏற்பட்டது.
மேலும் இரண்டு பெண் தூய்மை பணியாளர்களுக்கும் லேசான காயமும் ஏற்பட்டதில் உடனடியாக அப்பகுதியில் இருந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து அபிராமபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, விபத்து குறித்து காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளில், காரை ஓட்டிவந்தவர், மிக வேகமாக வந்து, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதியிருப்பது பதிவாகியிருக்கிறது.
இந்த சம்பவம் கார் ஓட்டுநரின் கவனக் குறைவால் நிகழ்ந்ததாக இருந்தாலும், இரவுப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசும் கவனம் செலுத்த வேண்டும்.
தூய்மைப் பணி நடப்பதற்கான அறிகுறிகளுடன் பலகைகள் ஒரு சாலையில் பணி நடக்கும் இடத்துக்கு சற்று முன்னதாகவே வைக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
அது மட்டுமல்லாமல், சாலை விளக்குகள் எரியாத இடங்களில் தூய்மைப் பணியாளர்கள், இரவு நேரப் பணியில் ஈடுபடும்போது, அவர்கள் அங்கு வேலை செய்வதை தொலைவில் இருந்து வேகமாக வரும் வாகனங்களும், ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முற்படும் வாகன ஓட்டிகளும் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.
இதனால் பல இடங்களில் அசம்பாவிதங்கள் நடக்கும் அபாயம் உள்ளதாகவே வாகன ஓட்டிகள் கருதுகிறார்கள். எனவே, தூய்மைப் பணி நடக்கும் இடங்களில் சமிக்ஜை காட்டும் பலகைகள் வைக்கப்பட வேண்டும், மற்றும் அவர்களுக்கு தனியாக பேட்டரியில் ஒளிரும் விளக்குகள் வழங்கப்பட்டு, பணி நடக்கும் இடத்தில் அவர்களது பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை மக்களின் கோரிக்கையாக உள்ளது.
The government should pay attention to ensuring the safety of sanitation workers during nighttime cleaning work.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.