மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!
மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 12) சென்னையில் தொடக்கி வைத்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்தார். அதனையடுத்து கூடுதல் மகளிர் பயனடையும் பொருட்டு, இத்திட்டம் இன்று முதல் இரண்டாம் கட்டமாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை கடந்த 2023-ஆம் தேதி முதல்வர் அறிவித்தார். சுமாா் 1,13,75,492 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை, சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்வில் மகளிருக்கு உரிமைத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
புதிதாக 16,94,339 பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை இன்று அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் எண்ணிக்கை 1.30 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் சமூக சேவகியும் பத்மபூஷண் விருது பெற்றவருமான கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் மற்றும் 2022-ஆம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளார் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய துளசிமதி முருகேசன் உள்பட ஏராளமான பெண் சாதனையாளா்கள் கலந்து கொண்டனர்.