பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் வழித் தடத்துக்கான சிக்னல் கட்டமைப்புக்கு மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, வருகின்ற ஜனவரி மாதம் முதல் பூந்தமல்லி - போரூர் இடையே ஆளில்லா மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2 ஆம் கட்டத்துக்கான திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி - போரூர் சந்திப்பு வரையிலான 10 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை பணிகள் நிறைவடைந்துள்ளது.
பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டப் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றன. இந்த வழித் தடத்தில் 3 முறை ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்திப் பார்க்கப்பட்டது.
அப்போது, இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தி காண்பிக்கப்பட்டது.
இதில், பிரேக்கிங், தண்டவாள தரம், ரயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதையடுத்து சிக்னல் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புக்கான இறுதி ஒப்புதலை கடந்த அக்டோபர் மாதமே மத்திய ரயில்வே அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமானது.
இந்த நிலையில், தற்போது இறுதி ஒப்புதலை மத்திய ரயில்வே அமைச்சகம் அளித்துள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள தொடக்கவிழாவில், பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் இணைந்து தொடங்கிவைக்கவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.