பூந்தமல்லி - போரூர் மெட்ரோ இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்! ஜனவரிமுதல் இயக்கம்!
பூந்தமல்லி - போரூர் மெட்ரோவுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது பற்றி...
பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் வழித் தடத்துக்கான சிக்னல் கட்டமைப்புக்கு மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, வருகின்ற ஜனவரி மாதம் முதல் பூந்தமல்லி - போரூர் இடையே ஆளில்லா மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
Advertisement
Advertisement
இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2 ஆம் கட்டத்துக்கான திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி - போரூர் சந்திப்பு வரையிலான 10 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை பணிகள் நிறைவடைந்துள்ளது.
பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டப் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றன. இந்த வழித் தடத்தில் 3 முறை ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்திப் பார்க்கப்பட்டது.
அப்போது, இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தி காண்பிக்கப்பட்டது.
இதில், பிரேக்கிங், தண்டவாள தரம், ரயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதையடுத்து சிக்னல் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புக்கான இறுதி ஒப்புதலை கடந்த அக்டோபர் மாதமே மத்திய ரயில்வே அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமானது.
இந்த நிலையில், தற்போது இறுதி ஒப்புதலை மத்திய ரயில்வே அமைச்சகம் அளித்துள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள தொடக்கவிழாவில், பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் இணைந்து தொடங்கிவைக்கவுள்ளனர்.
The Central Railway Board has approved the signaling system for the metro rail line between Poonamallee and Porur.
இதையும் படிக்க : பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.