முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை!

விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றி...

Updated On : 25 டிசம்பர் 2025, 1:05 pm IST
கோப்புப்படம்
பகிர்:

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி மற்றும் வழிபாடு புதன்கிழமை இரவும், வியாழக்கிழமை காலையிலும் நடைபெற்றது.

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை வியாழக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதன்கிழமை நள்ளிரவில் விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன.

புதன்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்கு மேல் விழுப்புரம் -கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. அப்போது இயேசு பிறந்தார் என்பதை எடுத்துக் கூறும் விதமாக குழந்தை இயேசு சொரூபம் அனைவரிடமும் காண்பிக்கப்பட்டு குடிலில் வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதுபோன்று விழுப்புரம் நகரிலுள்ள சி.எஸ்.ஐ. தூயஜேம்ஸ் தேவாலயம், சேவியர் காலனி தூய பவுல் மிஷனரி ஆலயம், டி.இ.எல்.சி. ஆலயம் உள்ளிட்ட அனைத்துத் தேவாலயங்களிலும் சிறப்புத் திருப்பலிக்காக குடில் அமைக்கப்பட்டு, கிறிஸ்து பிறப்புப் பாடல்களை பாடியபடி குழந்தை இயேசு சொரூபத்தை குடிலில் வைத்து ஆராதனை நடத்தினர்.

தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்புத் திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடைகளை அணிந்து பங்கேற்று, பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனை முடிந்த பின்னர் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கேக்குகளை பரிமாறியபடி, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

வியாழக்கிழமை காலையிலும் பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்புத்திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது. இதுபோன்று விக்கிரவாண்டி, காணை, கண்டமங்கலம், ஆரோவில், மரக்காணம், கோட்டக்குப்பம், வளவனூர், முகையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் புதன்கிழமை நள்ளிரவு சிறப்புத் திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இதுபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகரம், கெடிலம் போன்ற பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

summary

Christmas celebrations in Villupuram district: Special prayers held in churches

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.