விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.
மேலும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமாரும் தவெகவில் இணைந்துள்ளார்.
சென்னை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்துக்கு இன்று பகல் 12 மணியளவில் ஆதவ் அர்ஜுனாவும் நிர்மல் குமாரும் வருகை தந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இவர்கள் இருவரும் அக்கட்சியின் இணைந்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவில் முக்கிய பொறுப்பும், நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்ப அணியில் முக்கிய பொறுப்பும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்த ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைவது குறித்து அக்கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை நேரில் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை நடத்திய பிறகு இன்று அக்கட்சியில் இணைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.